நேற்று நண்பன் எனக்கு போன் செய்தான், சுக விசாரிப்புகளுக்கு பிறகு மரண செய்தி ஓன்று சொன்னான். நாங்கள் ஆரம்ப பள்ளி படித்த போது எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதாக கூறினான்.
சிறிது நேரம் அதை பற்றி பேசினோம். பழைய நினைவுகள் ஒவ்வொன்றை ஞாபகம் வந்தது. நாங்கள் படித்தது கிராமப்பள்ளி எல்லோரையும் போல மிட்டாய் கொடுத்து பள்ளியில் சேர்த்து விடுவர்.
என்ன படித்தோம் எப்படி படித்தோம் என்ற ஞாபகம் ஒன்றும் இல்லை. எனக்கு தெளிவாக ஞாபகம் உள்ளது எல்லாம் என் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்தான். அவர் இன்றும் மனதில் இருப்பதற்கு காரணம் அவர் ஒவ்வொரு நாளும் சொல்லும் கதைகள், எல்லா வித கதைகளும் சொல்வார். மந்திர தந்திர கதைகளை அவர் சொல்லும்போது சுவாரஸ்யமாய் இருக்கும். எங்களுடைய எல்லா பாடங்களும் அவர்தான் எடுப்பார்
பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வந்த பிறகும் அவரை போல யாரும் வகுப்பு எடுத்ததாக ஞாபகம் இல்லை.அவருடையான தொடர்பு நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது மீண்டும் வந்தது அப்போது நடந்த பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் பங்கேற்க கல்லூரி பிரின்சிபால் ஆக சிறிய வேடம் தந்தனர். தினமும் ஒத்திகை நடத்துவர் நமக்கு கொடுத்த வேடம் சும்மா "இந்த மாணவனை பாராட்டுகிறேன் இவன் எதிர் காலத்தில் பெரிய ஆளாக வருவான் " என்று பேச மட்டும் தான்.அதை பேச பயிற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று தினமும் வகுப்புக்கு தலையை மட்டும் காமித்து மீதி நேரம் எல்லாம் அங்கேதான் உட்கார்ந்து கிடப்பேன். அப்போது அவர் ஒவ்வொருவருக்கும் நடிப்பு சொல்லிகொடுக்கும் அழகே அழகு.
பின்னர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நமக்கு கொஞ்சம் பெரிய வேடமாக கொடுத்தார்கள்.கணக்கப்பிள்ளை வேடம் அதில் காமெடியாக நடிக்க சொல்லி கொடுக்கும் போது ஒவ்வொரு வசனத்திலும் எப்படி நடிக்கவேண்டும் எப்படி ரியாக்சன் கொடுக்கணும். மேடையில் பின்புறம் காட்டி நிற்ககூடாது அடுத்த நபர் பேசும்போது அப்படி நாம மெதுவாக நடந்து வந்து இன்னொரு மைக்கின் முன்னால் வருவது, அடுத்தவர் பேசுவதற்கு மைக்கை விட்டு நளினமாக நகர்ந்து நிற்பது சிலநேரம் நாடகத்துக்கு தேவையான பொருட்களை எப்படி நாடகம் நடக்கையிலே மேடைக்கு கொண்டு வருவது என் நுணுக்கமாய் சொல்லி தருவார்.
பின் எங்களின் உடற்பயிற்சி ஆசிரியர். அவரை ஒரு நாள் நான் என் அம்மாவிடம் மாட்டி விட்டேன். அது ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்போது வீட்டில் வெள்ளியன்று சிறுவர்மலர், தங்க மலர் வெளிவரும் வீடு பள்ளிக்கு அருகில் இருப்பதால் உணவருந்த வரும்போது அதை படிக்க நான் எப்படா வெள்ளி கிழமை வரும் என்றிருப்பேன். ஒரு வாரம் ஆர்வ மிகுதியில் ஓடி வரும்போது ஒருவன் மீது மோதி கன்னத்தில் வீங்கி விட்டது. வீட்டில் அம்மா கேட்டதற்கு என்ன சொல்ல என பயந்து விளையாட்டு டீச்சர் அடித்தார்கள் என பொய் சொல்லி வைக்க எங்கம்மா பள்ளிக்கு வந்து வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார்கள் மானத்தை.
மறுநாள் டீச்சர் என்னை கூப்பிட்டு நேற்று உன்னை பார்கவே இல்லையே எப்படிடா உன்னை அடிச்சிருப்பேன் எனக்கேட்டார்.நான் உண்மையே சொல்லி மேடம் இதை எங்கம்மாவிடம் சொல்லிராதிங்க இதுக்கும் சேர்த்து அடிப்பாங்க.அன்றிலிருந்து நான் விளையாட்டு வகுப்பில் விளையாடும்போது கீழ விழுந்தால் கூட கூப்பிட்டு டேய் என்னை காரணம்னு சொல்லிடாத என்பார்கள்.
பின் அமைந்த ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு சம்பவங்கள் உண்டு.ஆனாலும் என்னுடைய ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை மட்டும் மறக்கவே முடியாது.இன்னும் நீங்காத நினைவில் இருக்கிறார்கள்.கிராமத்து பள்ளியில் பயின்ற என்னுள் கதை வாசிப்புகளையும் நூலகம் போவதையும் தூண்டி விட்டவர்கள் அவர்கள்தான்.
அதில் ஒரு ஆசிரியர் இறந்து விட்டார் என்று கேட்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இன்றைய ஆங்கில பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவனாகிய என் மகனுக்கு கொடுக்கும் வீட்டு பாடங்களையும் புத்தகங்களையும் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது. இதில் என் மனைவி வேறு 50 க்கு 40 தாங்க எடுக்கிறான். முதல் ரேங்க் வாங்க மாட்டேன்கிறான் என்று புகார் வாசிக்கிறாள். எப்படிடா இதுவே முடியுது என்று நான் நினைத்து கொள்கிறேன் சொல்லவா முடியும் ...
இத்தனை பாடத்தையும் திணிக்கிறார்களே இப்ப உள்ள மாணவர்களுக்கு வருங்காலத்தில் இந்த பாடம்தான் ஞாபகம் வருமா இல்லை சொல்லிக்குடுத்த யாரவது ஞாபகத்திற்கு வருவார்களா தெரியவில்லை.